-
தலைப்பு மருத்துவ களஞ்சியப் பேரகராதி
-
ஆசிரியர் மணவை முஸ்தபா
-
தொகுப்பாளர் இரா. நடராசன், டாக்டர் ந. கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கு. கணேசன்
-
பதிப்பகம் மணவை பப்ளிகேஷன்
-
முகவரி சென்னை
-
ஆண்டு 2006
-
மூலவடிவம் pdf
-
மெய்ப்புநிலை To validate
-
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
-
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
-
பதிப்புரிமை அற்றது
-
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
-
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
-
-
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
-
CC Zero badge.svg Blank.jpg CC-logo.svg
-
Universal (CC0 1.0) Public Domain Dedication
-
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
-
No Copyright
-
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
-
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
-
-
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
-
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
-
MARUTHUVA
-
KALANJIYA
-
PERAGARATHI
-
(Medical Encyclopaedic
-
Tamil Dictionary)
-
Valar Tamil Selvar
-
Manavai Mustafa
-
Price: Rs. 395/-
-
மமுலோகோ.png
-
தொகுப்புத் துணைவர்கள்:
-
இரா. நடராசன்
-
டாக்டர் ந. கிருஷ்ணமூர்த்தி
-
டாக்டர் கு. கணேசன்
-
ஆய்வாளர்
-
டாக்டர் மு. செம்மல், M.B., M.D., B.Sc., M.Sc., D.L.O.,
-
--BIBLIOGRAPHICAL DATA
-Type Setting : Shree Print House
-
#1, Main Cross Street, Periyar Nagar
-
Adambakkam, Chennai - 600 088
-Cover Design : Swathi SoftSolutions
-
10/19, Basullah Road
-
T.Nagar, Chennai- 600017
-Printed at : Sekar Graphics Prints,
-
153, Bells Road,
-
Chennai - 600 005.
-Published : Manavaipublication
-
AE.5/103, Anna Nagar
-
Chennai-600040
-
நுழைவாயில்
-
எனது கால் நூற்றாண்டுக் கனவுகளிலொன்று இன்று நனவாக நூலுருவில் உங்கள் கரங்களில் தவழ்வது எனக்கு எல்லையில்லா மகிழ்வூட்டுவதாயுள்ளது. நான் இலக்கியத்தையும் மொழியியலையும் முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்தவன் என்றாலும் எனக்கு எப்போதும் அறிவியல், தொழில்நுட்பப் பாடங்களில் குறிப்பாக மருத்துவத்துறை நூல்களைப் படிப்பதிலும் அவற்றைப் பற்றித் தமிழிலே சிந்திப்பதிலும் எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம். மருத்துவத்தைத் தமிழில் சொல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை என் இளைய மகன் செம்மல் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியதன் விளைவே, அவன் மருத்துவ மாணவன் ஆகியது. மருத்துவக் கல்லூரியில் அவன் காலடி எடுத்து வைக்கும்முன் அவனிடம் என் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தினேன்.
-
உன் எதிர்கால நல்வாழ்வுக்காக மட்டும் உன்னை நான் மருத்துவம் பயில அனுப்பவில்லை. என்னுள் பல ஆண்டுகளாகக் கனன்று கொண்டிருக்கும் பேராசையொன்றை உன்மூலம் நிறைவேற்றி, உன் வாழ்வோடு என் வாழ்வையும் வெற்றியுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற பேரவா எனக்குண்டு. நீ மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்தபின் உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மருத்துவ நூல்களைத் தமிழில் தர வேண்டும். இவ்வெண்ணத்தை மருத்துவக் கல்லூரியில் கால்வைக்கும் போதே உறுதிமிக்க முடிவாக உன் உள்ளத்தின் அடித்தளத்தில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். மருத்துவத்தை ஆங்கில மொழிமூலம் படித்தாலும் அதைத் தமிழில் சொல்வது எப்படி என்ற சிந்தனை எப்போதும் உனக்கு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி நீ தமிழில் சொல்ல -விழையும் அறிவியல், மருத்துவச் செய்திகளை இலக்கிய நயத்தோடும் கற்பனைத் திறனோடும் புனைகதை வடிவில் இயன்றவரை கூற முற்பட வேண்டும். அப்போதுதான் சாதாரணமானவர்கள் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ள மருத்துவச் செய்திகளும் எளிமையாக அமைந்து, சாதாரண படிப்பறிவுள்ளவர்களுக்கும் எளிதாகப் புரியவும் விரைவாக அவர்களைப் போய்ச் சேரவும் வழியேற்படும். அதுவே, மகன் என்ற முறையில் தந்தையாகிய எனக்கு நீ செய்யும் உண்மையான கைம்மாறாக இருக்கும். இதைத் தவிர வேறு எதையும் நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை. இதைச் செய்வதாக எனக்கு நீ உறுதிமொழி தர வேண்டும்
-
என்று நான் கூறியபோது,
-
உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதையே என் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவேன்
-
என உறுதியளித்தான். என் மகனோடு இணைந்து நானும் கடந்த பல ஆண்டுக்காலமாக மருத்துவப் பாடநூல்களைப் படித்து வரலானேன். என் ஐயப்பாடுகளையெல்லாம் நான் தமிழில் கேட்பதும் அவற்றிற்கான விளக்கங்களை அவன் எனக்குத் தமிழில் விளக்குவதும் வழக்கமாகியது. இதன்மூலம் எங்கள் இருவரிடையேயும் மருத்துவக் கருத்துக்களைத் தமிழில் பரிமாறிக்கொள்வது எளிதானதாக மட்டுமல்லாமல் இனிமையானதாகவும் அமைந்ததெனலாம். அப்போதெல்லாம் வெளிப்படும் கருத்துக்களைக் குறித்து வைத்துக்கொள்வதையும் நான் வாடிக்கையாக்கிக் கொண்டேன். கடந்த பதினாறு ஆண்டு காலமாக என் மகன் டாக்டர் செம்மலின் உறுதுணையோடும் என் அருமை நண்பர்கள் திரு. இரா. நடராசன், இலக்கிய மருத்துவர் ந. கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ எழுத்தாளர் கு. கணேசன் ஆகியோர்களின் ஒத்துழைப்போடும் மருத்துவக் களஞ்சியப் பேரகராதி எனும் பெயரில் இந்நூல் வெளிவந்துள்ளது.
-
எனினும், இதற்கான அடித்தளம் நாற்பத்தைந்தாண்டுகட்கு முன்பே என் உள்ளத்தில் அழுத்தமாகப் போடப் பட்டிருந்ததை இந்நேரத்தில் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை.
-
இன்றைக்குச் சரியாக நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பு, 'Wonder Drugs’ எனும் ஆங்கில மருத்துவ நூலை தென்மொழிகள் புத்தக நிறுவனத்துக்காகத் தமிழில் பதிப்பிக்கும் பணியை நான் மேற்கொண்டபோதுதான், தமிழைப் பொறுத்தவரை இம்முயற்சியில் நாம் எங்கே நிற்க வேண்டியுள்ளது என்பது எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. அந்நூலை வெளியிட்டதனால் நான் பெற்ற பட்டறிவு மிகவும் பயனுள்ளதாயமைந்தது. உயிரியல் என்ற நூலையும் யுனெஸ்கோ கூரியர் திங்களிதழில் தொடர்ந்து 1970இல் புற்றுநோய் பற்றியும் அடுத்து 1972இல் இதய நோய் பற்றியும் சிறப்பிதழ்களை தமிழில் வெளியிடும்போது மருத்துவத்தைத் தமிழில் சொல்லும்போது எதிர்ப்படும் இடர்ப்பாடுகள் என்னென்ன என்பது புலனாகியது.
-
மருத்துவ நூல்கள் தமிழில் நிறைய வெளிவரவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம். ஆனால், பிற மொழிகளில் வெளிவரும் அளவுக்கு அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவ நூல்கள் தமிழில் வெளிவருவதில்லை. இதற்கு என்ன காரணம்?
-
நம்மிடையே அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத் துறைகளில் பொருளறிவும் தமிழறிவும் எழுத்துத் திறனும் மிக்கவர்கட்குப் பஞ்சமில்லை. இத்துறைகளைப் பற்றித் தமிழில் தெளிவாகவும் திட்பமாகவும் விளக்கிக்கூற முடியும் என்ற ஆர்வத் துடிப்பினர் பலருண்டு. அவர்கள் எழுதவும் முனைகிறார்கள். அப்போது அவர்கள் முயற்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக வந்தமைவது கலைச்சொற்கள் (Technical terms) ஆகும். ஆங்கிலக் கலைச்சொற்களுக்கேற்ற நேர்த் தமிழ் கலைச்சொற்களை, எழுத முனையும் எல்லோராலும் உரிய முறையில் கலைச் சொற்களை உருவாக்க இயலுவதில்லை. அதற்கேற்ற மொழியறிவும் இலக்கணப் புலமையும் வேர்ச்சொல் அறிவும் போதிய அளவு இல்லாததால் ஆங்கிலக் கலைச்சொற்களை மொழி பெயர்ப்புச் செய்தும் சில சமயங்களில் ஒலிபெயர்ப்புச்செய்தும் பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டாகிறது. இதனால் கலைச்சொல் மொழிபெயர்ப்பு நீளமாகவும் பொருட் பிறழ்வுடையதாகவும் அமைய நேர்கிறது. பெயர்ப்பால் போதிய பொருள்விளக்கம் பெற முடிவதில்லை. இதனால் சொற்செட்டும் பொருட் செறிவுமுடைய சுருங்கிய வடிவிலான கலைச்சொற்கள் உருவாக இயலாமல் போகிறது. இதன் விளைவாக ஆர்வத்தோடு எழுத முனைந்த நூலாசிரியர் ஒரு சில பக்கங்களிலேயே மனச்சோர்வடைந்து தன் முயற்சியை தொடராது விட்டுவிட நேர்கிறது. இதனை, இம் முயற்சி யாளர்கள் மூலம் கேட்கும்போதெல்லாம் கலைச்சொல் இடர்ப்பாட்டை நீக்கினால் பொருளறிவுமிக்க, ஒரளவு தமிழறிவும் எழுத்தாற்றலுமுள்ள இவர்கள் நூல் எழுத ஏதுவாக இருக்குமே என்ற எண்ணம் என்னுள் அழுத்தம் பெறும். அதன் விளைவாக அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத்துறைக் கலைச்சொல்லாக்க முயற்சியில் முழு ஈடுபாடு கொள்ளலானேன்.
-
நூல் எழுதுவோருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்கட்கும் படிப்பார்வலர்கட்கும் மட்டும் பயன்படுவதோடு அமையாது சாதாரண வாசகர்கட்கும் பயன்பட வேண்டும். ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொல்லும், அக்கலைச்சொல்லுக்கு விளக்கமாக ஒரு அறிவியல் செய்தியும் படிப்போர்க்குக் கிடைக்க வேண்டும் என்று விழைந்தேன். அதையும் பட விளக்கத்தோடு தந்துதவ வேண்டும் என விரும்பினேன். விளைவு களஞ்சியப் போக்கில் ஒரு புதுவகை கலைச்சொல் அகராதியை வடிவமைத்தேன்.இப்புதுவகை 'கலைச்சொல் களஞ்சியம்' முதல் தொகுதி 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற பெயரில் 1990இல் வெளிவந்தது. இதே பெயரில் இரண்டாவது தொகுதி 1993இல் வெளிவந்தது. இவற்றில் 36 அறிவியல் தொழில்நுட்பப் பிரிவுகட்கான கலைச்சொற்களும் விளக்கங்களும் இடம்பெற்றன. மூன்றாவது தொகுதி 1995இல் மருத்துவ, அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி என்ற பெயரில் வெளிவந்தது. 68 அறிவியல் தொழில்நுட்ப, மருத்துவப் பிரிவுகட்கான கலைச் சொற்களையும் விளக்கங்களையும் கொண்டதாக அஃது அமைந்தது. இந்நூல் அரசு, மக்களின் பேராதரவையும் பெற்றது. அறிவியல் தமிழ் ஆர்வலர்களும், இதழ்களும், நூலாசிரியர்களும் என் முயற்சியைப் பாராட்டி ஊக்குவித்தனர். ‘அனந்தாச்சாரி ஃபெளண்டேஷன் ஆஃப் இந்தியா', முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை போன்ற அமைப்புகள் பரிசும் பாராட்டும் வழங்கிச் சிறப்பித்தனர்.
-
நான்காவது களஞ்சிய அகராதியாக ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்'எனும் நூலை வெளியிட்டேன். பின்னர் ஐந்தாவது தொகுதியாக கணினிக் கலைச் சொற்களுக்கான “கணிணிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி” எனும் பெயரில் வெளியிட்டேன். ஆறாவது தொகுதியாக “கணினி களஞ்சிய அகராதி" நூலை 2001இல் வெளியிட்டேன். ஏழாவது தொகுதியாக “கணினிக் களஞ்சியப் பேரகராதி" யை 2002இல் 1600 பக்கங்களில் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் பேரகராதியாக வெளிவந்தது. எட்டாவது தொகுதி “மருத்துவக் களஞ்சியப் பேரகராதி" நூலை இதேபோக்கில் மருத்துவவியலின் பதினைந்து பிரிவுகட்குரிய ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நேர்த் தமிழ்க் கலைச்சொற்களும் அவற்றிற்கான பொருள் விளக்கமும் படங்களோடு தயாரிக்கத் தொடங்கினேன். ஆங்கிலக் கலைச் சொற்களை இனங்கண்டு தேர்வு செய்வதில் என் மகன் டாக்டர் செம்மலின் பங்கு கணிசமானது. தமிழ்க் கலைச்சொல் உருவாக்கத்திலும் தமிழில் பொருள் விளக்கம் வரைவதிலும் நண்பர் திரு. இரா. நடராசன், இலக்கிய மருத்துவர் ந. கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் கு. கணேசன் ஆகியோரின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். நாங்கள் எவ்வளவுதான் திறம்படச் செயல்பட்டாலும் மருத்துவவியல் வல்லுநர் என்ற முறையில் 'ஸ்ரீ ராமச்சந்திரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் நீண்டகாலமாக என் அறிவியல் தமிழ் வளர்ச்சி முயற்சிகளுக்குப் பின் துணையாக இருப்பதில் பெருமகிழ்வு கொண்டவருமான பேராசிரியர், மறைந்த மருத்துவர் லலிதா காமேஸ்வரன் அவர்கள் தனக்குள்ள பெரும்பணிகளுக்கிடையேயும் வரிவரியாகப் படித்து குறை நிறைகளைச் சுட்டிக்காட்டியும் தேவையான மாற்றதிருத்தங்களைச் செய்து நூலின் ஒரு பகுதியைச் செப்பனிட்டு தந்தார்கள்.
-
'அலோபதி' என்றழைக்கப்படும் ஆங்கில மருத்துவத்தைத் தமிழில் தரும் முயற்சி 1852-லேயே ஃபிஷ்கிரீன் எனும் அமெரிக்க மருத்துவப் பேராசிரியரால் இலங்கை யாழ்ப்பாணத்தில் முதன் முதல் தொடங்கி வைக்கப்பட்டது. டாக்டர் கட்டர் ஆங்கிலத்தில் எழுதிய 'Anatomy Physiology and Hygiene' எனும் நூலை மொழிபெயர்த்தார். தமிழ் நூல் என மகுடம் தாங்கி வெளிவந்த போதிலும் அதில் இடம் பெற்ற பெரும்பாலான சொற்கள், குறிப்பாகக் கலைச் சொற்கள் தமிழ் எழுத்தோடு கூடிய சம்ஸ்கிருதச் சொற்களேயாகும். தமிழோடு கலந்து அதிகப் புழக்கத்திலிருந்ததால் சம்ஸ்கிருத மொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாகவே ஃபிஷ்கிரீன் கருதியதே இதற்குக் காரணம்
-
தமிழில் கலைக் களஞ்சியங்கள் வெளிவரத் தொடங்கிய பின்னர் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதிய மருத்துவத்துறை வல்லுநர்கள், கூடியவரை மருத்துவக் கலைச்சொற்களைத் தமிழில் தருவதில் பேரார்வம் காட்டினர். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியம் உருவானபோது அதில் மருத்துவம் தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழிலேயே சொல்விளக்கம் கொடுக்கப் பட்டது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கல்லூரிப் பாட நூல்களாக சில மருத்துவ நூல்களை மருத்துவர்களைக் கொண்டு எழுதச் செய்தது. அந்நூல்கள் விரும்பும் வகையில் அமைய இயலாமற்போயினும் அதில் இடம்பெற்ற மருத்துவக் கலைச்சொற்கள் தமிழிலேயே பெரும்பாலும் அமைந்திருந்தன. இதற்குக் காரணம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமே மருத்துவக் கலைச் சொற்களைத் தொகுத்து நூலாசிரியர்கட்கு வழங்கியதாகும்.
-
தமிழ்ப் பல்கலைக்கழகம் 'அறிவியல் களஞ்சியம்' தொகுதிகளை வெளியிட முனைந்தபோது நல்ல தமிழில் மருத்துவக் கட்டுரைகளை எழுதச் செய்து பெறுவதில் பெருங்கவனம் செலுத்தியது. மருத்துவப் புலமையோடு தமிழறிவுமிக்க டாக்டர் சாமி சண்முகம் போன்றவர்கள் அறிவியல் களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்ததால் மருத்துவக் கலைச்சொற்கள் அழகான தமிழ்ச் சொல்வடிவங்களாக இடம்பெற்றன. அப்போதைய துணைவேந்தர் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப 'அறிவியல் களஞ்சியம்' முதல் தொகுதியை மேற்பார்வையிட்டு வடிவமைத்து அச்சுப்பதிவம் தயாரிக்கும் பணியை நிறைவேற்றும் வாய்ப்பை நான் மேற்கொண்டு, நிறைவேற்றினேன். அவற்றுள் இடம்பெற்ற மருத்துவக் கலைச் சொற்கள் பல அழகு தமிழில் பொருட்செறிவோடு அமைந்தவைகளாகும்.
-
தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் 'கலைக் கதிர்' திங்களிதழில் இடம்பெற்ற அறிவியல் கலைச்சொற்களை யெல்லாம் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் தொகுத்து அடிப்படை அறிவியல், 'பயனுற அறிவியல்' என்ற பெயர்களில் நூலுருவில் வெளியிட்டார். இவை பொருளறிவைக் காட்டிலும் மொழித் திறத்துக்கு முதன்மை தருபவைகளாக அமைந்துவிட்டதெனலாம். 'யுனெஸ்கோ கூரியர்' பன்னாட்டுத் திங்களிதழில் பன்னூறு மருத்துவக் கட்டுரைகள் கடந்த முப்பத்தியைந்து ஆண்டுக் காலமாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தமிழில் வெளியிடும்போது மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடும் மருத்துவ வல்லுநர்களின் உறுதுணையோடும் பல நூறு மருத்துவக் கலைச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தும் இனிய வாய்ப்பு எனக்கேற்பட்டது.
-
மருத்துவக் கலைச்சொற்களைப் பொறுத்தவரை கடந்த கால முயற்சிகளைக் கருத்திற் கொண்டு 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதி' நூலை உருவாக்கியுள்ளேன். மருத்துவத்துறைத் தொடர்பான பொருளறிவைப் புகட்டுவதற்கான துணைக்கருவியாகத்தான் மொழியைக் கையாண்டுள்ளேன். இயல்பிலேயே தமிழ் ஒர் அறிவியல் மொழியாக - அறிவியலை நுண்மாண் நுழைபுலத்தோடு உணர்த்தவல்ல ஆற்றல்மிகு மொழியாக - அமைந்திருப்பதால் கடினமானதாகப் பலரும் கருதும் கலைச்சொல்லாக்க முயற்சி எளிதானதாக அமைவதாயிற்று. தமிழைப் போற்றத் தெரிந்த அளவுக்கு அதன் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்ளவோ உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவோ முனையா மலிருக்கிறோம் என்பதுதான் உண்மை. அறிவியலைப் பொறுத்த வரை தமிழின் தனித்திறத்தை செயல்வடிவாக உலகுமுன் எண்பிக்கும் வகையிலே என் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளேன்.
-
இந்நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரையொன்றை வழங்கியுள்ளார் மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள். கடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது உலகத் தமிழர் நலன் காக்கும் காவலராகவும் திகழ்ந்து வருபவர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள்.
-
தமிழ், தமிழர் நலனை இரு கண்களாகக் கருதி செயல்படும் அன்னார், தமிழ் வளர்ச்சியில் பேரார்வ- முடையவர் என்பதைக் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக கண்டு வருகிறேன். மலேசிய மண்ணில் இரு பெரும் உலகத் தமிழ் மாநாடுகளை சீரும், சிறப்புமாக நடத்திய பெருமைக் குரிய பெருந்தகை. பன்னாட்டுத் தமிழ் இணையதள மாநாட்டை கோலாலம்பூரில் சிறப்பாக நடத்தி பன்னாட்டுத் தமிழ் இணையதள முயற்சியில் உலகளவில் தமிழுக்கு தனித்துவ நிலை கிடைக்க வழிவகுத்தவர்.
-
'யார்?' என்று பாராது 'என்ன?' என்பதில் கருத்துன்றிச் செயல்படும் இயல்பினரான இப்பெருந்தகை, தமிழ் வளர்ச்சிக்கு, தமிழர் நலனுக்கு உழைப்பவர்கட்கு துணை நிற்பதில் பெருமகிழ்வும், மனநிறைவும் கொள்பவர். இவரது அன்பாலும் உதவி ஒத்துழைப்பாலும் எனது 'கணிணி களஞ்சிய அகராதி' இரண்டாம் தொகுதி வெளிவந்தது போன்றே, இம் 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதியும்' வெளிவருகிறது. இவரது உதவியும், ஒத்துழைப்பும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான மாபெரும் உந்துவிசை என்பது வரலாற்றுப் பதிவாகும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் கம்பனுக்கு சடையப்ப வள்ளல் வாய்த்தது போல் என் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிக்கு ஆதரவு தரும் பெருந்தகையாக வாய்த்தவர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் எனக் கூறுவதில் பெருமையடைகிறேன்.
-
எனது கலைச்சொல் களஞ்சிய அகராதி வெளியீட்டுப் பணிக்கு மாபெரும் உந்துவிசையாக இருந்து வருபவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதே போன்று எனது அறிவியல் தமிழ்ப் பணிக்குத் தோன்றாத் துணையாக இருந்து வருபவர் இனமான பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். அவர்கள் மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் நூலுக்கு வழங்கியிருந்த சிறப்புரையை, அந்நூலின் விரிவாக வெளிவரும் 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதிக்கும்' பொருந்துவதால் இந்நூலிலும் அதனை இடம்பெறச் செய்துள்ளது பொருத்தமெனக் கருதுகிறேன். மேலும், பேராசிரியர் டாக்டர் லலிதா காமேசுவரன் அவர்கள் 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' நூலுக்கு வழங்கியிருந்த 'ஆய்வுரை'யையும் அந்நூலின் விரிவாக உருவாகியுள்ள இந்நூலிலும் இடம்பெறச் செய்துள்ளேன். இவர்கட்கெல்லாம் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.
-
இந்நூல் உருவாக்கத்துக்கு என் ஆருயிர் நண்பர் மறைந்த இரா. நடராசனார் அவர்கட்கும், 'மருத்துவ மலர்' சிறப்பாசிரியர் இலக்கிய மருத்துவர் ந. கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கும் இதழ்கள் வாயிலாகவும் தம் நூல்கள் மூலமும் மருத்துவ அறிவைப் பரப்பிவரும் மருத்துவர் கு. கணேசன் அவர்கட்கும் நான் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
-
இந்நூல் உருவாக்கத்தில் எல்லா வகையிலும் எனக்குத் தோன்றாத் துணையாக இருந்துவரும் என் துணைவியார் திருமதி சித்தை செளதா அவர்கட்கும், என் மகன் மருத்துவர் மு. செம்மல் அவர்கட்கும், மிகுந்த பொறுமையோடு சிறப்பாக கணிணியில் ஒளிஅச்சுப் பதிவம் உருவாக்கித் தந்த ஸ்ரீ பிரிண்ட் ஹவுஸ் திரு. கோபிநாத் அவர்கட்கும், திருமதி ந. லட்சுமி அவர்கட்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அவ்வாறே மிக அழகிய வடிவில் அட்டைப் படம் வடித்துத் தந்த சுவாதி சாஃப்ட் சொலுஷன் நிறுவனர் திரு. எஸ். மகேந்திரகுமார் அவர்கட்கும் அழகிய முறையில் அச்சிட்ட காரிஸ் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும்.
-
எனது முந்தைய படைப்புகளைப் போன்றே இந்த அகராதி நூலையும் தமிழுலகம் ஏற்று ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு எப்போதும் முழு நம்பிக்கை உண்டு.
-
மணவை முஸ்தபா
-
நூலாசிரியர்
-
நூலாசிரியர் திரு. மணவை முஸ்தபாவுடன்
-
மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரும்
-
மலேசிய அரசின் பொதுப் பணித்துறை அமைச்சருமான
-
டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள்.
-
- மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் வழங்கிய
-
அணிந்துரை
-
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" எனத் தமிழின் இனிமைச் சிறப்பைப் புகழ்ந்து பாடினான் பாரதி. 'தமிழ் இனிய மொழி மட்டுமல்ல ஆற்றல்மிகு அறிவியல் மொழியுமாகும்' எனப் போற்றிப் புகழ்வதோடு அமையாது, தம் கடும் முயற்சியாலும் செயல்பாடுகளாலும் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக "தமிழ் ஒர் அறிவியல் மொழி" என்பதை வெறும் சொற்களால் அல்லாமல் செயல் வடிவில் காண்பித்து வருகிறார் திரு. மணவை முஸ்தபா அவர்கள்
-
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
-
வழுவில, கால வகையினானே"
-
என்ற பொருள் பொதிந்த பழம்பாடலுக்கிணங்க இன்றைய காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப முதன்மைத் தமிழ்ப் பணியாக திரு. மணவையார் தேர்ந்தெடுத்திருப்பது 'அறிவியல் கலைச் செயலாக்கப் பணி' ஆகும். 1996 இல் வெளியிடப்பட்ட 'மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூலினை 48,686 கலைச் சொற்களாக விரிவாக்கி விளக்கம் தந்து புதிய வடிவில் 1200 பக்கங்களைக் கொண்டு "மருத்துவக் களஞ்சியப் பேரகராதி" உருவாக்கியுள்ளார் திரு. மணவை முஸ்தபா அவர்கள்.
-
உருவாக்கம் பெறும் கலைச் சொற்களை வெறும் பட்டியலாக அமைக்காமல் அவற்றை ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்க் கலைச்சொல், சொல் விளக்கம், பொருள் விளக்கங்களை படங்களோடு, பட விளக்கங் களோடும் வெளியிடுவதன் மூலம் அகராதித் தன்மையையும் களஞ்சியப் போக்கையும் ஒருங்கிணைத்து 'களஞ்சிய அகராதி' எனும் புதுவகை அமைப்பில் உருவாக்கியிருப்பது எல்லா வகையிலும் பாராட்டத்தக்க புது முயற்சியாகும். மருத்துவம் பயிலாத ஒருவர் ஒரு ஆங்கில மருத்துவக் கலைச்சொல் மூலம், அதற்கு நிகரான தமிழ்க் கலைச்சொல், அதன் பொருள் விளக்கங்களைப் படம் மற்றும் பட விளக்கத்தோடு படிக்கும்போது, அச்சொல் மூலம் மருத்துவத் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாக "Pancreas' என்ற ஆங்கிலக் கலைச் சொல்லுக்குக் 'கணையம்' எனும் தமிழ்க் கலைச்சொல்லைத் தருவதோடு அமையாது அது இதயத்தின் எப்பகுதியில் எவ்வடிவில் அமைந்துள்ளது மற்றும் எவ்வகைப் பணிகளைச் செய்கிறது என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
-
"Pancreas : கணையம் : இது இரைப்பையின் அருகிலுள்ள செரிமானத்துக்குரிய நீர் சுரக்கும் சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் வால் பகுதி மண்ணிரலைத் தொட்டுக் கொண்டிருக்கும். இது சுமார் 18 செ.மீ. நீளமும் சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் என்ற இயக்கு நீரும் (ஹார்மோன்) சிறுகுடலில் கொழுப்புகளையும் புரதங்களையும் சீரணிக்கக்கூடிய செரிமானப் பொருள்கள் அடங்கிய கணைய நீரும் சுரக்கின்றன." எனப் படத்தோடு தரும் விளக்கம் தெளிவாகவும் திட்ப நுட்பமாகவும் இருக்கிறது. இதே முறை இம்மருத்துவக் 'களஞ்சியப் பேரகராதி' முழுமையும் கையாளப்பட்டுள்ளது.
-
மலேசியத் தமிழர்களால் பெரிதும் புகழப்படும் திரு. முஸ்தபாவின் தமிழ்ப்பணி பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 'செம்மொழி' என தமிழ்மொழியை அறிவிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, "கூரியர்" இதழ் மூலம் ஆற்றிய தமிழ்த் தொண்டு அனைவரும் பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
-
இன்றைய இன்றியமையாக் காலத் தேவையை முழுமையாக நிறைவு செய்யும் இவரது அறிவியல் கலைச் சொல்லாக்கப் பணி நாளும் தொடர வேண்டும். அதற்குத் துணையாயிருப்பது நம் அனைவரின் கடமையாகும். அவர் முயற்சி எல்லா வகையிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
-
ச. சாமிவேலு
-
-முன்னுரை
-
திரு. மணவை முஸ்தபா 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதி' என்ற இந்நூலை வல்லுநர்களின் உதவியோடு எழுதியிருக்கிறார். இந்நூல் சொல்லுக்குப் பொருள்தரும் அகராதியாக மட்டுமின்றி, நூலின் பெயருக்கேற்ப விளக்கம் தரும் கலைக்களஞ்சியமாகவும் திகழ்கிறது. சான்றாக "Viral haemorrhagic fever" என்பதற்குத் தமிழில் கிருமிக் குருதிப் போக்குக் காய்ச்சல் என்று பொருள் தருவதோடு வெப்ப மண்டலப் பகுதிகளில் கொசுவினால் அல்லது நச்சு உண்ணிகளால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல் என்று விளக்கமும் இதில் தரப்பட்டுள்ளது. poliomyelitis-என்பதற்கு 'இளம்பிள்ளை வாதம்' என்பதோடு முதுகுத் தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி, முளைத் தண்டிலும் முதுகுத் தண்டிலும் உள்ள முன்பக்கக் கொம்புகளின் இயக்க நரம்பணுக்களை ஒரு கொள்ளை நோய்கிருமி தாக்குவதால் இது உண்டாகிறது' என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
-
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமின்றி செயற்படுத்தும் நோக்கோடு தமிழ்வளர்ச்சிக் கென்று தனியாக ஒரு அமைச்சரை நியமித்து, மொழியியல், மருத்துவம் போன்ற துறைகளையும் தமிழில் கற்க முடியும் என்பதற்கான பணிகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய பணிகளுக்கு மணவை முஸ்தபாவின் 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் கைகொடுக்கும்.
-
மு. கருணாநிதி
-
(மருத்துவக் கலைச்சொல் களஞ்சிய
-
அகராதி நூல் முன்னுரைச் சுருக்கம்)
-
சிறப்புரை
-
வறுமைச் குழலுக்கு ஆளான குடும்பத்தில் பிறந்து
-
பெற்றோர் செய்தொழிலில் தானும் உழைத்தவாரே,
-
பள்ளியில் சேர்ந்து படித்திடத் தானே வலியச் சென்று சேர்ந்து,
-
ஓய்வு வாய்த்த போதெல்லாம் ஏடுகள் பல பயின்று,
-
இனம் பிள்ளையாய்த் தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்டு,
-
சமூகத்தின் மூடநம்பிக்கைகளை மறுக்கும் துணிவெய்தி,
-
அறிஞர் அண்ணாவின் உரையினைக் கேட்டு ஊக்கங்கொண்டு,
-
பள்ளியிலேயே கட்டுரை வரைவதில் வல்லவனாகி,
-
பின்னர் பேச்சாற்றலும் காட்டிப் பரிசுகள் பல பெற்று,
-
தமிழறிஞர் பலராலும் பாராட்டப்பட்ட மாணவ மணியாகி,
-
அண்ணாமலை பல்கலைக் கழகம் சார்ந்து தமிழின் முதுகலைஞனாகி,
-
தமிழ்த் தொண்டே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு,
-
வாய்த்த கல்லூரி ஆசிரியர் பணியையும் ஊதியத்தையும் துறந்து
-
தமிழ் ஆக்கத்திற்கே முழுநேரம் உழைத்திடும் உறுதி பூண்டு,
-
ஏடுகட்கு எழுதுவதையே வாழ்க்கைத் தொழிலாக ஏற்று,
-
தென்மொழிகள் புத்தக நிறுவனத்தின் பணியின் சேர்ந்து,
-
அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் கலை ஏடுகளும் வெளிவர
-
மூலநூலைச் சீர்செய்து மெய்ப்புத் திருத்துவதில் திறன்காட்டி,
-
முத்திங்கள் இதழான 'புத்தக நண்ப'னைச் சீருற வெளியிட்டு,
-
யுனெஸ்கோவின் அறிவியல் பேழையாம் 'கூரியர்' ஏட்டின்
-
தமிழ்ப்பதிப்பை வெளியிடும் பணியிலும் பங்கேற்றுத்
-
தன் மதிநுட்பம் காட்டியும் நிறுவனத்தார் மதிப்பைப் பெற்றும்
-
பொறுப்பாசிரியராய் உயர்ந்து, கால் நூற்றாண்டாக
-
அதன் செவிலித் தாயாகச் சீராட்டி வளர்த்து வருபவர்தான்
-
என் நண்பர் மணவை முஸ்தபா என்னும் தமிழ் மறவர்
-
'கூரியர்' ஏட்டினைத் தமிழில் வெளியிடும் சிறப்பினை யுனெஸ்கோ பாராட்டிய செய்தி கண்டு உவந்த தமிழுள்ளங் கொண்ட காயிதேமில்லத் இஸ்மாயீல் சாகிப் வழங்கிய அன்புப் பாராட்டும் வாழ்த்தும் முஸ்தபாவின் தமிழ்த்
-
தொண்டினை மேலும் ஊக்குவித்தது. அவரது அயராத அறிவியல் தமிழ்த் தொண்டினை மேலும் ஊக்குவித்தது. அவரது அரியத் தமிழ்த் தொண்டு தமிழுலகின் மதிப்பைப் பெற்றது. தமிழக அரசின் கலைமாமணி விருதும், திரு.வி.க. விருதும் இன்னும் பலவகை பாராட்டுகளையும் பெற்ற பெருமை அவருக்கு உண்டு. பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைத் தாக்கம் அவரை மூடநம்பிக்கையை விரட்டுவதிலும் அறிவியல் சிந்தனையை வளர்ப்பதிலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைவழித் தாக்கம் அறிவியல் சிந்தனையைத் தமிழில் வளர்ப்பதிலும் அவரை முனைந்திடச் செய்தது.
-
அவரது குறிக்கோளுக்குக் 'கூரியர்' பொறுப்பு நல்வாய்ப்பாயிற்று. கூரியர் வளர்ச்சிக்கு அவரது தொண்டு நல்வாய்ப்பாயிற்று. இந்த இஸ்லாமியத் தமிழர், தமிழிலும் தேர்ச்சி பெற்றதன்றி, அடிப்படை வடமொழிப் பயிற்சியும் பெற்றவராவார். எம்மொழிப் பயிற்சியும் எத்துறை அறிவும் திறமையும் எல்லாம் எந்தாய்மொழி தமிழின் ஆக்கத்திற்கே எனும் திண்மையர் அவர். "நான் நிறையப் படிக்கிறேன், படித்தவைகளைப் பற்றி ஆழச் சிந்திக்கிறேன். அவை என் மனதில் அப்படியே படிந்து விடுகின்றன. எழுதும்போது அவையெல்லாம் அப்படியே என் எழுத்தில் பதிகின்றன" என்று தன் எழுத்துத் திறமையை ஐயுற்ற ஆசிரியருக்கு மாணவர் முஸ்தபா கூறிய பதில் "விளையும் பயிர் முளையிலே" தந்த காட்சி. "விளைந்த பயிர் முதிர்விலே" அதன் பயனை உலகு பாராட்டுகிறது.
-
பேச்சும் எழுத்தும் மாந்தர் எண்ணத்தை வெளியிட ஏதுவாகும் தலைசிறந்த கருவி மொழி. அவ்வகையில் மனித உணர்வுகளை, பண்பாடுகளை, ஒழுக்க நெறிகளை, உயர் சிந்தனையை வெளியிடுவதற்கு முழு ஆற்றல் பெற்ற நிறைமொழியாக விளங்குவதே செந்தமிழ். தமிழ்மொழி பேசி வாழ்ந்துவரும் மக்கள் நாகரிக வளர்ச்சியும் அறிவியல் சார்ந்த முயற்சிகளிலும் மேம்பட்டு விளங்கிய காலம் வரையில், அவர் தம் மொழியும் அதற்கேற்ற சொற்களையும் கண்டு வளம்
-
பெற்று வந்துள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களின் வாழ்வில் சமய வழிப்பட்ட சிந்தனையும் புராணக் கற்பனையுமே மேம்பட்டு நின்றதால், உலகியல் வாழ்விலும் அறிவியல் எண்ண வளர்ச்சியிலும் பின்தங்கி விட்டனராதலின், தமிழ்மொழியும் அறிவியல் துறையில் புத்தாக்கம் பெறும் வாய்ப்பிழந்தது. ஆங்கில நாட்டவர் ஆட்சியின் விளைவாக நமது மக்கள் பயில நேரிட்ட ஆங்கிலமே மேல்நாடுகளில் வியத்தகு வளர்ச்சி பெற்று வந்த அறிவியல் கருத்துக்களை நாமறிய வாய்த்ததொரு வாயிலாக அமைந்தது. நம்மைப் பொறுத்தவரையில் 'ஆங்கிலமே' புத்துலக அறிவியல் ஒளி வழங்கிய பலகணியாகும்.
-
எழுத்தறிவு பெறாத மக்கள் பெரும்பான்மையினராக இருந்த நிலையிலும், ஏட்டறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் பெற முடியாத வறுமைச் சூழலிலும் - அறிவியல் கருத்துக்கள், விஞ்ஞான விளக்கங்கள் மக்களைச் சென்றடையவில்லை. மக்களின் பலவகை மூடநம்பிக்கைகள் ஒரு வகையில் அறிவு நாட்டத்திற்குத் தடையாயிற்று எனினும், அறிவியல் உண்மை விளக்கங்கள் தாய்மொழியில் விளக்கப்படாமையே அடிப்படைக் காரணமாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த கல்வியைத் தமிழிலேயே பயில்வதற்கு வழிசெய்யும் முயற்சியாகப் பலநூறு ஏடுகள் தமிழில் வெளிவந்துள்ளன. கல்லூரியில் பயிலும் மாணவர் களுக்கான உயர்கல்வி ஏடுகளும் பல இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அனைத்தையும் தமிழிலேயே பயிலச் செய்யும் அளவிற்கோ, மாணவர்களே பயில முன்வரும் அளவிற்கோ பல்கலை அறிவியற் பாடங்கள் அனைத்தும் தமிழில் வெளிவருவதற்கான முயற்சி தொடர வேண்டியுள்ளது. மருத்துவம், பொறியியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கால்நடை மருத்துவம் முதலான துறைகள் பலவற்றையும் தமிழில் வழங்கச் செய்யும் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகளால் நாள்தோறும் வெளி-
-
வரும் புதிய உண்மைகளையும் நுணுக்கங்களையும் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்து தமிழில் அரங்கேற்றும் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.
-
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் வகைப்படுத்தப் பட்டிருந்த அறிவியல் துறைகள் இன்று மேலும் பல கிளைகளாக விரிவடைந்திருப்பது மட்டுமின்றி, கடந்த ஒரு நூற்றாண்டில் அறிவியல் எய்திய வளர்ச்சி விகிதத்தை இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளிலேயே எட்டி யுள்ளது. இன்றோ அதைப் போன்று மேலும் பல மடங்கு விரைவுடன் அறிவியல் வளர்ந்து வருகின்றது. அது உலகத்தின் பல நாடுகளிலும் (சில மொழிகளிலும்) நாளும் உருவாகிவரும் அறிவியல் வளர்ச்சியின் விரைவு என்பதால், நாம் அந்த விரைவுக்கு ஈடுகொடுக்கும் சூழலில்லை. எனினும் அவற்றின் பயனை நாமும் உடனுக்குடன் பெறுவதற்கு இன்றியமையாத மொழிபெயர்ப்புத் திறனை மிகப் பெரிய அளவில் மட்டுமின்றி, விரைவாகச் செய்திடவல்ல கணிப்பொறிப் பயன் பாட்டையும் மேற்கொண்டு நிறைவேற்றிட முனைய வேண்டும். அப்படிப்பட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப் பட்டாலன்றி, நமது முன்னேற்றம் மட்டுமன்றி, வாழ்க்கை நிலையும் மேலும் பின்னடைவுக்கு ஆளாகி, நாம் உலகோரால் கருதப்பட வேண்டாதவர் ஆவோம்.
-
இதைத் தெளிவாக உணர்ந்தவர் திரு.மணவை முஸ்தபா. அறிவியல் கருத்தைத் தமிழில் தர முடியுமா? மாணவர்களின் அறிவியல் பயிற்சி மொழியாகும் தகுதி தமிழுக்கு உண்டா? இருப்பினும் பயன்படுமா? என்றெல்லாம் ஐயுறவு எழுப்பியவர்கட்கெல்லாம் - தகுந்த விடை அளித்தவர் அவர்.
-
"தமிழில்" எந்தத் (அறிவியல்) துறைச் செய்தியையும், சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் கூற முடியும், எத்தகைய அறிவியல்நுட்பக் கருத்துக்களையும், தெளிவாகவும் திட்பமாகவும் சொல்ல முடியும். ஏனெனில் தமிழ் கடந்தகால மொழி மட்டுமல்ல; நிகழ்கால மொழியுமாகும் ஆற்றல்மிக்க
-
எதிர்கால மொழியுமாகும். இன்று முதல் தமிழில் எதையும் கூற முடியும் என்பதை வெறும் சொல்லால் அல்ல; செயலால் நிரூபிப்பதே என் வாழ்வின் ஒரே இலட்சியம், "குறிக்கோள்" என்று ஒரு மேடையில் திரு. முஸ்தபா கூறிய உறுதிமொழியைச் செயற்படுத்திக் காட்டவே தன்னை முழுவதுமாய் அப்பணிக்கே ஒப்படைத்துக் கொண்டுள்ளவர் அவர்.
-
எந்தப் பொருள் குறித்த சொல்லாயினும் மக்கள் வழக்கில் இடம்பெற்று அப்பொருளைக் குறிக்கும் ஒரே சொல்லாக இது நிலைபெறுவதைப் பொறுத்தே ஒரே சொல்லாக அமையலாகும்.
-
சைக்கிள் - ஈருருளி, மிதிவண்டி எனவும்,
-
பிளசர் கார் - மகிழுந்து, சீருந்து எனவும்,
-
பஸ் - பேருந்து, பயணி உந்து எனவும்,
-
டிரெயின் - தொடர்வண்டி - நீராவி வண்டி எனவும்,
-
ஏரோபிளேன் - விமானம், வானூர்தி எனவும்.
-
வழங்குவது போன்ற நிலை இடைக்காலத்தே தொடர்வது இயல்பே. மலேசியாவிலும் சிங்கையிலும் பெட்ரோல் பம்பு எண்ணெய்க்கடை என்றும், டிபன் சாப்பிட்டீர்களா என்று கேட்கப்படும் காலைச் சிற்றுணவைக் குறிக்கும் வகையில் பசியாறியாச்சா என்றும் கேட்கின்றனர். இது வழக்காற்றலால் ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்தும் திறன் பெறுவதைக் காட்டும். தமிழகத்தில் எண்ணெய்க் கடை, உணவுக்கு வேண்டிய எண்ணெய்களை விற்கும் இடத்தைக் குறிக்கும். மேலும் கெரசின் மண்ணெண்ணை’ என்று வழங்குவது போன்று பெட்ரோலுக்கும், டீசலுக்கும் தமிழில் தனிச்சொல் அமையவில்லை. அவைபோன்று மருத்துவத் துறை சார்ந்த Dettol; Tincture; Turpentine; Terramycin முதலான சொற்களுக்கு ஈடாகத் தனித் தமிழ்ச் சொல் இல்லை. அப்படியே வழங்கலும் பொருந்தும். ஆங்கிலத்தில் இடம்பெற்ற அறிவியல் கலைச்சொற்கள் அவை உருக்கொண்ட வகையால் பருப்பொருளை உணர்த்துவதிலும், அப்பொருளையும், இயல்புகளையும்
-
விளைவுகளையும் நுணுக்கமாகப் புலப்படுத்தும் திறமுடையவையாதலின், சொல்லுக்குச் சொல் இதுவே தமிழ்ச்சொல் எனக் கொண்டு வரையறுத்துக் கையாளுதல் மொழிபெயர்ப்பில் எளிதன்று சொல்லுக்குச் சொல் இது என்னும் நிலை அறிவியல் கலைச்சொல் மொழிபெயர்ப்பில் உருவாகிட, தமிழில் கையாளப்படக் கூடிய கலைச்சொற்களைப் பொருள் வரையறை செய்து முறைப்படுத்துவதும் விரைவு படுத்தப்பட்டாக வேண்டும்.
-
A Dictionary of standardised Scientific and Technological terms in Tamil உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அப்பணிக்கும் இன்றியமையாத அடிப்படைப் பணியாக அமைந்திருப்பது இந்தக் களஞ்சியம் ஆகும். ஆங்கிலச் சொற்கள் பல நாம் வழக்கமாக உணரும் பொருளில் இருந்து சற்றே வேறுபட்டதொரு குறிப்பிட்ட பொருளை வழங்குவதாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
-
Advancement - எனில் மாறுகண் அறுவை மருத்துவம்
-
Affiliation - எனில் (தொடர்புடை) மூலம் காணல்
-
Antisocial - எனில் மனநலக்கேடு
-
Aspiration - எனில் உறிஞ்சி இழுத்தல்
-
Contract - எனில் நோய்பீடித்தல், தொற்றுதல்
-
Culture - எனில் நுண்ணுயிர் வளர்ப்புப் பண்ணை
-
Flora - எனில் நுண்ணுயிர் படை எனவும்
-
வழங்குவதையும் அவைபோன்ற பல சொற்களையும் இக்களஞ்சியத்தில் காணலாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில மருத்துவச்சொற்களின் பொருளை நாம் விளங்கிக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட Angia; Angiogram; Angiography; X-ray; Gamma rays; virus; laser முதலான பல சொற்கள் குறிக்கும் பொருளை இந்தக் களஞ்சியம் தெளிவடையச் செய்கிறது.
-
அறிவியல் ஆய்வு புதிய உண்மைகளையும், பல பொருள் ஆற்றலையும் பயனையும் அதனைப் பயன்
-
கொள்ளும் கருவியையும் கண்டுபிடிப்பதால் நாள்தோறும் வளர்வது. அப்படிக் கண்டறிந்த மேதைக்கு உலகம் கடமைப்பட்டுள்ளது. எனவே அவர் பெயராலோ, அவர் சூட்ட நேரிட்ட பெயராகவோ அவை வழங்குவது தமிழ் ஆக்கத்திற்குத் தடையல்ல. பொருளின் பெயர் மருந்து பெயர் பலவும் பெயர்ச் சொற்களேயாவதால் அதே பெயர் தமிழிலும் பயன்படுத்தப்படுவது தவறல்ல. ஆனால் அவற்றை எவரும் எதுவெனத் தெளிவதற்கான விளக்கம் தமிழில் தரப்படுவதே தமிழுக்கு ஆற்றவேண்டிய அறிவியல் ஆக்கப்பணி யாகும். அந்த அரிய பணியைத் திறம்படவும் தெளிவுடையதாகவும் ஆற்றியுள்ளார் திரு. மணவை முஸ்தபா.
-
தமிழ் மண்ணில் தொன்னாளிலேயே வளர்ந்து, பயன்பட்டு அண்மைக் காலத்தில் தொய்வடைய நேரிட்டுள்ளது சித்த மருத்துவம். அந்த மருத்துவ முறையையும் மருந்து செய்முறைகளையும் விளக்கி எழுந்த செய்யுள் ஏடுகள் பல. அவர்கள் உடற்கூற்றினையும் அதன் இயக்கத்தையும், உள் உறுப்புகளையும் குறித்து அறிந்து பெயரிட்டு வழங்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இடம்பெற்ற மருத்துவக் கலைச்சொற்கள் பலவற்றிற்கு ஈடான தமிழ்ச் சொற்களை நாம் அவற்றுள் கண்டறியலாகும். சித்த மருத்துவச் சொற்கள் பலவும், சில நோய்களின் பெயர்களும் முன்னரே கைக்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகை முயற்சியில் சித்த மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் ஈடுபடவும், அம்முயற்சியால் மருத்துவ அறிவியல் தழைக்கவும் இந்தக் களஞ்சியம் ஏற்றதொரு துணையாகும். மேலும் "மருத்துவம், வேதியியல், தாவர இயல் தொடர்புடைய அறிவியல்" என்னும் பெயருடன் அறிவியல் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் தரும் பேரகராதி ஒன்றினை, அறிவாற்றலில் சிறந்த டி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே தன் தனி முயற்சியால் உருவாக்கியுள்ளதை அறிந்தவர் எவரும் நன்றியுடன் போற்றத் தவறார். சித்த மருத்துவ நூற்களில் தமிழ்
-
வழக்கிலும் இடம்பெற்ற பெயர்களாக அந்த அகரவரிசையில் காணப்படும் சொற்கள் பலவும், இப்படிப்பட்ட மருத்துவக் களஞ்சியப் பணி விரிவுக்குப் பெரிதுப் பயன்படும் என்று கருதுகிறேன்.
-
அலோபதி மருத்துவப் பட்டப்படிப்பும் தமிழில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதற்கான நியாயங்கள் வளர்ந்துள்ள இக்காலத்தில், தேர்ந்த மருத்துவ அறிவாற்றலைத் தமிழில் பெறமுடியுமா? என்னும் கேள்வி எழுப்பும் இளைஞர் உலகம் தெளிவடைந்து தன்னம்பிக்கை கொள்வதற்கும் இந்தக் களஞ்சியம் வழிசெய்யும் என்பதில் ஐயமில்லை. அறிவியல் மருத்துவ நூல் எழுதுவார்க்கும் தகுந்த தமிழ் வழக்கை நாடுவார்க்கும் ஏற்றதொரு கையேடாகவும் இது விளங்கும்.
-
மேலும் விரித்துரைக்க நான் ஒரு மருத்துவனோ அறிவியல் துறையினனோ அல்ல. சுருங்கச் சொல்வதானால், இந்தக் களஞ்சியம் மருத்துவ அறிவியல் தமிழ் ஆக்கத்திற்கு அமைக்கப்பட்ட புதிய பாதையாகும். இந்தப் பாதையைப் பயன்படுத்தி நடப்போர் பலராகிடின் தமிழில் அறிவியல் கருத்துக்களைக் கையாளும் திறனும் அதனை வளர்க்கும் ஆர்வமும் மேலோங்கும் என்பது உறுதி
-
காலமெல்லாம் தமிழ் ஆக்கப் பணியில் ஈடுபட்டுள்ள 'கூரியர்' ஆசிரியரும், கூரிய சிந்தனையாளருமான இதன் ஆசிரியர் காலம் தேடும் தமிழன் மணவை முஸ்தபா அவர்களை எவ்வளவு பாராட்டினும் தகும் அவருக்கு - அவரது தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்.
-
க. அன்பழகன்
-
(மேனாள் கல்வியமைச்சர்,
-
தமிழ்நாடு அரசு)
-
ஆய்வுரை
-
தமிழில் பேச்சு வழக்கில் "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். திரு. மணவை முஸ்தபா அவர்கள் படைத்திருக்கும் இந்த நூல் அடிப்படையில் ஒரு கலைச்சொல் அகராதியாக மட்டுமின்றி, மருத்துவக் கலைக்களஞ்சியமாகவும் உருப்பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு மாங்காய்களுடன் ஆசிரியர் நின்றுவிடவில்லை. மூன்றாவது ஒரு மாங்காய் விழுந்தாலும் விழட்டுமே என்ற கருத்தும் மறைவாக மிளிர்கிறது. அகராதியைப் பயன்படுத்துவோர் சிந்தனைக்கு ஒரு துண்டுகோலாகவும் இந்நூல் இயங்க வாய்ப்பிருக்கிறது. இந்த மருத்துவ அகராதிக் கலைக்களஞ்சியத் தொகுப்பினை பயன்படுத்துவோர், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைச்சொற்களை விட சிறந்த வேறு பொருத்தமான சொற்களைப் புனைய முன்வரின் மூன்றாவது குறிக்கோளும் நிறைவுப்பெறும்.
-
இன்றைய மருத்துவ அறிவியல் சொற்களுக்கெல்லாம் தனித் தமிழ்ச் சொற்களை உருவாக்கி, அவைகளைப் பயன் படுத்தி, மருத்துவ நூலாக்கத்தை இயக்கி மருத்துவம் சார்ந்த கல்வி - மற்றும் பயிற்சி அரங்குகள் அனைத்தும் தமிழில் வர வேண்டும் என்று காத்திருந்தோமானால் அது அண்மைக் காலத்திற்குள் நிறைவேறக்கூடிய கனவாக இருக்காது.
-
லண்டன் மாநகரத்தில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து சில காலம் "அறிவியல் ருசிய மொழி" பயிற்சி பெற்றேன். நான் ஏற்கெனவே ஆங்கிலத்தில் பழகியிருந்த பல மருத்துவச் சொற்கள் ருசிய மொழி அறிவியல் கட்டுரைகளில் பயன் படுத்தப்படுவதைப் பார்த்தேன். ஆசிரியையாக இருந்த ருசியப் பெண்மணியிடம் இதுபற்றிப் பேசினேன். அவர்கள் சொன்ன கருத்தை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் கருதி கீழே தருகிறேன்: "உலகில் பல பகுதிகளும் ஒரளவு நாகரிகம் வளர்ச்சியடைந்திருந்த காலத்தில் கருத்துப் புரட்சி,
-
சமுதாயப் புரட்சி இவை ஐரோப்பாக் கண்டத்தில் தோன்றி, அறிவியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் வித்திட்டன.
-
பலவாறான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. பல புதிய கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிமுகமாயின. இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று, புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல அறிவியல் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு, உலகுக்கு அறிமுகமாயின. இவைகளை ஆங்கிலச் சொல் என்றோ, ஜெர்மானியச் சொல் என்றோ, ஜப்பானியச் சொல் என்றோ சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்பையும் யார் முதலில் உலகுக்கு வழங்குகிறார்களோ அவர்கள் அவைகளை விளக்க உருவாக்கிய சொற்களை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புக்களுக்கு எப்படி அவர்களைச் சொந்தக்காரர்கள் என்று சொல்கிறோமோ அதைப் போலவே அவர்கள் உருவாக்கிய சொற்களும் அவர்களுடைய படைப்புக்களே. அந்தச் சொற்களை அறிவியல் மக்கள் சமுதாயம் - உலகப் பொதுச் சொற்களாகத் தான் கருத வேண்டும்" என்பதே அந்த அம்மையார் தந்த விளக்கம். இந்த முறையில் "வைரஸ்", "லேசர்", "பெனிசிலின்", "மார்ஃபின்" போன்ற பல சொற்களை நாம் அப்படியே பயன்படுத்தினாலும்கூட ஒரு அறிவியல் மருத்துவக் களஞ்சியத்தில் அந்த சொற்கள் உருவாகிய அடிப்படை வரலாற்றையும் குறிப்பிட்டு எழுதும்போதுதான் அதன் பொருளும் விளக்கமும் முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
-
சோதனைக் குழாய், புதை சாக்கடை, கட்டி, கரப்பான், புற்று, காசம், ஈளை, இருமல் போன்ற பல சொற்கள் ஏற்கெனவே தமிழ் வழக்கில் இருக்கின்றன. இப்படி ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொற்களை இன்றும் அறிவியல் கருத்துக்களை எடுத்தியம்பும்போது பயன்படுத்து-
-
கிறோம். இவை தவிர, முன் பழக்கத்தில் இருந்து, மறைந்து போன சில தமிழ் அறிவியல் சொற்களைக் கண்டுபிடித்து மறுபடியும் அவற்றிற்குப் புத்துயிரூட்டி பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். திரு. மணவை முஸ்தபா அவர்கள் இந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். "Slough" என்றால் "பொருக்கு", "Desquamation" என்றால் "செதிளுதிர்வு" என்று மிகத் தெளிவாக விளங்கும் வகையில் சொற்களைப் பயன்படுத்தும் முறையைச் சுட்டியிருக்கிறார்கள்.
-
இது தவிர பழைய சித்த மருத்துவ நூல்களில் உடலுறுப்புகளையும் நோய் வகை மருத்துவ முறைகள் போன்றவற்றைச் சுட்டுவதற்கும் பல சொற்கள் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும். நாடி, நரம்பு, நாளம், நோய் என்று பல சொற்களை நாம் எடுத்தாள்கிறோம். அதைப் போலவே இன்னும் பல சொற்கள் இருக்கக் கூடும். சித்த மருத்துவர்களும், தமிழறிஞர்களும் கூட்டாகச் சேர்ந்து ஒரு தமிழ்-ஆங்கில (சித்த) மருத்துவ அகராதியைத் தயாரித்தால் அது நமக்குப் பெரும் பயனளிக்கும். மறைந்த தமிழ் மருத்துவ அறிவியல் சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
-
ஆங்கில மருத்துவச் சொற்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்று அறியும்போது சில சொற்கள் காரணப் பெயர்களாக இருக்கக் காண்கிறோம். அதே காரணங்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து அவற்றில் இருந்து புதுத் தமிழ் மருத்துவச் சொற்களை உருவாக்கும் வழியும் கடைப்பிடிக்கப்பட்டு, அப்படி சில நல்ல சொற்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. "Thyroid" என்பதற்கு கேடயச் சுரப்பி என்றும் "Adrenal" என்பதற்கு அண்ணீரகச் சுரப்பி என்றும் சொற்கள் உருவாக்கப்பட்டு அவை தமிழில் பழக்கத்தில் வந்துவிட்டன. இவைகளை எல்லாம் கூடியவரை ஆசிரியர் அகராதிக்குள் இணைத்திருக்கிறார்.
-
நாட்டுப்புற மக்கள் சில சமயங்களில் பட்டறிவு அடிப்படையில் அவர்களாகவே சில சொற்களை உருவாக்கி விடுவார்கள். மலேரியா காய்ச்சலை 'முறைக் காய்ச்சல்' என்றும் தூரத்துப் பார்வையை 'வெள்ளை முத்து' என்றும் 'wrist' என்பதற்கு மணிக்கட்டு என்றும் தமிழ்ச் சமுதாயம் ஏற்கனவே உருவாக்கிவிட்ட சொற்களையும் நாம் தள்ளி விட முடியாது. அவைகளை நம்முடைய சொற்களஞ்சிய தொகுப்புகளில் சேர்க்கத்தான் வேண்டும்.
-
ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் பல புதுச் சொற்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழியில் தொடர்புடைய பொருள் தரும் சொற்களில் வேர்ச் சொற்களை ஆராய்ந்து எடுத்து அவற்றில் இருந்து புதுச் சொற்களை உருவாக்கி யிருக்கிறார்கள். மார்ஃபின் (morphine) என்னும் மருந்து தூக்கத்தை உண்டாக்கும். கிரேக்கப் புராணத்தில் கனவுக்கு (dreams) பொறுப்பான கடவுள் மார்ஃபியா. அதனால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கு மார்ஃபின் என்று பெயர் சூட்டினர். அதைக் கண்டுபிடித்த வேதியல் நிபுணர், அப்படிப்பட்ட சொற்கள் அனைத்தையும் காரணச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல்லையும் அதன் வேர்ச் சொல்லையும் கண்டுபிடித்து அதிலிருந்து புதிய தமிழ்ச் சொல்லை உருவாக்கலாம் என்று நினைத்தோமானால் அது முடிவே இல்லாத பணியாகிவிடும். அப்படிப்பட்ட பல சொற்களை நாம் அப்படியே தமிழில் எழுதி பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கிறோம். வேறு புதுச் சொற்களை உருவாக்க முடியாத இத்தகு சூழ்நிலைகளில் இன்று ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களை எடுத்துத் தேவைக்கேற்றபடி பகுதி, விகுதி மாற்றங்களை மட்டும் செய்துகொண்டு, தமிழ்ப் பழக்கத்திற்கு அவைகளை கொண்டு வரலாம் என்று, நாம் உணரும் வகையில் திரு. மணவை முஸ்தபா அவர்கள் பல சொற்களை கலைச்சொல் அகராதிக் களஞ்சியத்தில் சேர்த்திருப்பது பாராட்டுதற்குரியது.
-
இந்த அகராதி களஞ்சியத் தொகுப்பைப் பயன்படுத்துவதில் பல அரிய வாய்ப்புகளும் சிந்தனைகளும் உருவாக வழியுண்டு.
-
- தமிழில் மருத்துவ நூல்கள் எழுத வேண்டும் என்று நினைப்போர் பொருத்தமான தமிழ் மருத்துவக் கலைச் சொற்களைத் தேடி பல அகராதிகளை வைத்துக் கொண்டு நேரம் அனைத்தும் வீணாகாமல் இந்த நூலை அருகில் வைத்துக் கொண்டு விரைவாகக் கருத்துக்களுக்கு உரிய எழுத்து வடிவம் கொடுக்கமுடியும்.
-
சாதாரண அகராதிகளைப் போல் தமிழில் ஆங்கிலச் சொல்லுக்கு நேர்ச்சொல் மட்டும் தந்து பொறுப்பை முடித்து விடாமல், அதன் பொருள் விளக்கத்தையும் சுருக்கமாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். மருத்துவத் தமிழ்ச் சொல்லைத் தெரிந்து கொள்வதுடன் சாதாரண மக்கள் அறிவியல் செய்திகளையும் தெரிந்து கொள்ளப் பயன்படும் வகையில் தொகுத்திருக்கிறார். எ.கா. "Version" என்ற சொல்லுக்கு 'நிலை திருப்பம்' என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல், "மகப்பேற்று மருத்துவத்தில் குழந்தை எளிதாக வெளிவரும் பொருட்டு கருப்பைக்குள் குழந்தை கிடக்கும் நிலையை மாற்றி தலைப்பாகம் முதலில் வெளியேறுமாறு செய்தல்" என்று விளக்கம் தந்திருக்கும் பாங்கு மக்கள் எளிதில் தெரிந்துகொண்டு பொருளுடன், செய்தியையும் உணர்ந்து கொள்ள ஒரு கருவியாய் அமைகிறது. இந்நூல் இப்படி ஆசிரியர் விளக்கி இருப்பதால் எதிர்காலத்தில் சில நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். இப்படி தரப்பட்டிருக்கும் பல விளக்கங்களை படிக்கும் யாருக்காவது இதைவிட சிறப்பான ஒரு தமிழ்ச் சொல்லை உருவாக்கக்கூடிய கற்பனை தோன்றும்போது தமிழுக்குப் புதுச் சொற்கள் சேரும்; தமிழ் வளம் பெறும்.
-
- அகராதியைப் பயன்படுத்தும்போது அதில் தரப் பெற்றிருக்கும் சொல் பொருத்தமானதாக இல்லை என்று ஒருவருக்குத் தோன்றினாலும் இருக்கும் சொற்களில் சிறு மாற்றங்கள் செய்து வலிமை தந்து, சொல்லை ஏற்றம் பெறச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
-
- முழுவதுமாகவே ஒரு சொல் பொருத்தமற்றது என்று அதைத் தள்ளிவிட்டு சிறந்த ஒரு புதுச்சொல்லை உருவாக்க ஒரு சிலராவது முயல்வர். அதனாலும் தமிழுக்கு வளம் சேரும்.
-
எந்த வகையில் பார்த்தாலும் இதைப் பாராட்டுவோர் தொண்டாலும், குறைகூறுவோர் முயற்சியாலும் இறுதியில் மேலும் பல புதிய சொற்கள் உருவாகித் தமிழ் வளர வாய்ப்பாகும் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆசிரியரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
-
பழைய இலக்கியத் தமிழ், இன்றைய பழகு தமிழ்-இவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போருக்கிடையே, புதிய தமிழ், நாளையத் தமிழ், அறிவியல் தமிழ் என்றெல்லாம் சிந்திப்போரும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் திரு. மணவை முஸ்தபா அவர்களை முதன்மையானவராகத் திகழ்கிறார் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம்.
-
மருத்துவச் சொற்களை திட்பநுட்பத்துடன் தமிழில் சொல்ல முடியும் எனக் காட்டியிருப்பதுடன், சொற் செட்டுடன் பொருட்செறிவும் ஒருசேர அவற்றுடன் இலக்கிய மெருகும் ஏற்றி சுவைபட அறிவியல் செய்திகளைத் தமிழில் சொல்லலாம் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. மொழிக்கு மட்டும் முதன்மை தராமல் மருத்துவப் பொருளறிவை விளக்கவல்ல துணைக் கருவியாக மொழியைக் கையாளும் பாங்கால், மருத்துவச் செய்திகளை ஆற்றலுடன் ஆசிரியரால் விளக்க முடிகிறது. இதற்காகத் தவிர்க்க முடியாத இடங்களில் ஆசிரியர் தனித் தமிழ் போக்கினைக் கூட நழுவ விடவேண்டிய நிலை உருவாகிறது.
-
மருத்துவப் பல்கலைக் கழகங்களும் வல்லுநர் குழுவும் செயல்பட்டு உருவாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் சொல் தொகுப்பு நூலை' தனியொருவராக முயன்று, பாராட்டத்தக்க முறையில் நிறைவேற்றியிருப்பது தமிழர் அனைவர்க்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. துறை வல்லுநர்கள் கூட அவரவர் துறைகளில்தான் சிந்தனையாளராகத் திகழ முடியும். ஆனால் பல மருத்துவப் பிரிவுகளுக்கும் உரிய கலைச்சொல்லாக்கங்களை கண்டிருப்பதன்மூலம் இம் முயற்சியில் திரு. மணவை முஸ்தபா அவர்கள் தமிழறிவுடன் மருத்துவ அறிவையும் எவ்வளவு ஆழ்ந்து நுணுகிக் கற்றுத் தேர்வுபெற்றுள்ளார் என்பது அனைவரையும் வியக்க வைக்கும்.
-
ஆங்கிலத்தில் இவ்வகையான அகராதி-களஞ்சிய நூல்கள் பல இருப்பினும் இந்திய மொழிகளுள் இதுவே முதலாவதான முயற்சியாய் இருக்கக்கூடும் என்று நம்புகிறேன். ஒரு சொல் மூலம், ஒரு மருத்துவச் செய்தியைக் கூறுவதன் மூலம் சாதாரணப் படிப்பறிவு உள்ளவர்களும் மருத்துவ அறிவு பெறவும் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் துணை செய்வதாகும்.
-
இந்நூலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் பல இடங்களில் தெளிவான படங்களையும், பட விளக்கங்களையும் கொண்டமைந்திருப்பதாகும். எல்லா வகையிலும் நூல் சிறப்பாக அமைய வேண்டும் என்னும் ஆசிரியரின் வேட்கையை இது புலப்படுத்துகிறது. இந்நூல்வழி மேலும் தொடர்ந்து வளம் பெற்று அவர் வழியில் இன்னும் பலர் மருத்துவத் தமிழ் நூல்களை இயற்றித் தமிழ் மொழி ஏற்றத்தை விரைவில் எய்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாகவும் இருக்கும். அவர் முயற்சியும் அவரால் தூண்டப்பட்டு மேலும் பலர் செய்யப்போகும் முயற்சிகளும் வெற்றி பெற வேண்டி வாழ்த்துவோம்.
-
பேராசிரியர் டாக்டர் லலிதா காமேசுவரன்
-
(மேனாள் துணைவேந்தர்,
-
ஸ்ரீராமச்சந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
-
வாழ்த்துரை
-
"நேற்று, இன்று, நாளை; நடப்பவை, நடக்க வேண்டியவை அனைத்தையும் கவனித்து தொடர்ச்சியாக, தேவையான முறையில்தான் தமிழ் வளர்ச்சியடைய வேண்டும்.
-
பல்வேறு தமிழ்க் கவிஞர்களாலும் தமிழ் வல்லுநர்களாலும் இன்றைய தமிழ் மணக்கிறது. பழங்காலத் தமிழ் மணம் மட்டும் போதாது. புதிய மணமும் வேண்டும். காலத்திற்கேற்ற கருத்துக்கள் அனைத்தும் தமிழில் எடுத்துக்கூறும் உண்மையைத் தமிழ் வளர வேண்டும். வேகமாக முன்னேறிவரும் புதுப்புது எண்ணங்கள், கருத்துக்கள் யாவையும் எழுத்தில் வடித்துத் தருவதற்குத் தமிழால் முடியும் என்ற அளவிற்கு தமிழ் வளர்ந்தால்தான் தமிழ் வளர்ச்சி அடைந்திருப்பதாகக் கொள்ள முடியும். எனவே, தமிழ்நாட்டில் இத்தகைய சக்தியும் ஆர்வமும் கொண்ட பல்வேறு தமிழ் மேதைகள் தோன்ற வேண்டும்.
-
எல்லாம் தமிழால் முடியும் என்ற நிலைதான் தமிழின் வளர்ச்சி, தமிழனின் வளர்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பதை நாம் எல்லோரும் உணரவேண்டும். அதே எண்ணம் நம் தமிழ் பெருமக்களிடையே எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக உறுதியாகப் பதிகின்றதோ அதே அளவுக்கு தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறக்கும், மணக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
-
தமிழகம் தழைத்தோங்க தமிழால் முடியும் என்ற அந்த நம்பிக்கை எல்லோரிடத்திலும் வளர வேண்டும் என்பதே எனது விருப்பம் வேண்டுகோள்" என 25-1-62 இல் வெளியிட்ட "தமிழால் முடியும்" என்ற நூலில் குறிப்பிட்டிருந்தேன்.
-
கடந்த 35 ஆண்டுகளில் பல தமிழன்பர்கள் நான் அன்று கண்ட கனவை நனவாக்க முயற்சி எடுத்து சிலர் வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் முதன்மை பெற்று விளங்குபவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். பல நுண்ணிய நவீன கருத்துக்களையும் தமிழில் கூற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். இதன் மூலமாகப் புதிய தமிழ்ப் பதங்களையும் உருவாக்கித் தமிழின் வளத்தைப் பெருக்கி வருகிறார் திரு. மணவை முஸ்தபா.
-
இதோடு திருப்தியடையாமல் தமிழில் அறிவியல், தொழில்நுட்ப நூல்களை பலர் எழுதுவதற்கு உதவும் முறையில் பல கலைச்சொல் களஞ்சியங்களைப் பெருமுயற்சியுடன் சிறந்த முறையில் வெளியிட்டு வருகிறார். தற்போது மருத்துவக் களஞ்சிய அகராதியை வெளியிட்டுள்ளார். இக்களஞ்சிய அகராதி தமிழில் பல மருத்துவ நூல்கள் வெளிவர உதவும் என நம்புகிறேன்.
-
திரு. மணவை முஸ்தபா அவர்கட்கு எனது நல்வாழ்த்துக்கள்.
-
சி. சுப்பிரமணியம்
-
(மருத்துவக் கலைச்சொல்
-
களஞ்சிய அகராதி
-
நூல் வாழ்த்துரை)
-
காணிக்கை
-
என் வகுப்புத் தோழரும் என்னை முழுமையாகப் புரிந்து கொண்டு என் முயற்சிகளுக் கெல்லாம் தோள் கொடுத்து வந்தவரும் என் கடந்த கால வாழ்வையும் முயற்சிகளையும் நூல் வடிவில் பதிவு செய்தவருமான அருமை நண்பர் இரா. நடராசனார் அவர்களின் என்றென்றுமான இனிய நினைவுக்கும், எனது அறிவியல் தமிழ்ப் பணியை கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடையறாது ஊக்கிவந்தவரும் என் மருத்துவக் கலைச்சொல் மற்றும் விளக்கங்களை எழுத்தெண்ணிப் படித்து ஆய்வுரை வழங்கிய மறைந்த மருத்துவப் பேராசிரியை டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்களின் என்றென்றுமான இனிய நினைவுக்கும் இந்நூலை காணிக்கை ஆக்குகிறேன்.
-
நூலாசிரியர்