/kanmani_pugal

கண்மணிப்புகழ் மருத்துவ அகராதி | முனைவர் திருமதி ச.கண்மணிகணேசன் | மரு.புகழேந்திப்பாண்டியன் | kanmani_pugal medical eng-tam dictionary

GNU General Public License v3.0GPL-3.0

கண்மணிப்புகழ் மருத்துவ அகராதி

  • கண்மணிப்புகழ் மருத்துவ அகராதி |
  • முனைவர் திருமதி ச.கண்மணிகணேசன் |
  • மரு.புகழேந்திப்பாண்டியன் |
  • kanmani_pugal medical eng-tam dictionary

கைபேசி தொகுப்புரை

“தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்வீர்” என்பார் முண்டாசுக் கவி சுப்பிரமணிய பாரதியார். இவ்வரிகளிளிருந்து இயல்பாகவே தமிழின் ஓசை இனிமையானதுதான் என்பதும்; அந்தத் தமிழோசையை உலகம் எங்கும் பரப்ப வேண்டும் என்பதும் தெளிவாகிறது. எவ்வாறு பரப்புவது? அதிக தமிழ்ச் சொற்கள் புதிதாக உருவாக வேண்டும். தமிழில் கூற முடியாத பொருளே இல்லை என்ற நிலையை உருவாக்கி விட வேண்டும், அவ்வளவுதான். பின்னர் எளிதாக தமிழோசையை உலகெலாம் பரவும் வகை செய்திடலாம்.

பொறியியலிலும், மருத்துவத்திலும் தமிழில் சொற்கள் குறைவுதான், என்னும் எண்ணம் தமிழரிடையே உண்டல்லவா? இக்குறையை ஈடு செய்யும் பொருட்டு முனைவர் திருமதி ச.கண்மணிகணேசன் அவர்கள் தன் தம்பி மருத்துவர் புகழேந்திப்பாண்டியனோடு மருத்துவநூல் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் மொழி பெயர்ப்பு நிகழ்வுகளை ஆர்வத்தோடு அசை போடுபவராகவே திருமதி ச.கண்மணிகணேசன் அவர்கள் இருந்து வந்துள்ளார்.

முனைவர் திருமதி ச.கண்மணிகணேசன் அவர்கள் 1976இல் தனியார் கல்லூரித் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி; முனைவர் பட்டம் பெற்ற பிறகு இணைப்பேராசிரியராகித்; தன்னாட்சிக் கல்லூரியின் தேர்வாணையராக ஓராண்டு பணியாற்றிய பின்னர்; விருப்பஓய்வு பெற்று; பத்தாண்டு காலம் சுயநிதிக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர்.

அவரது தம்பி மரு.புகழேந்திப்பாண்டியன் தனது தாயின் ஊக்குவிப்பால் சிறுவயதிலிருந்தே தமிழ்ப் பேச்சுப்போட்டிகளில் பங்குபெற்றுத் தமிழார்வம் வளர்க்கப் பெற்றவர். பேராசிரியர் நவநீதகிருஷ்ணன், பேராசிரியர் சேதுரகுநாதன், புலவர் முத்தையா போன்ற நல்லாசிரியர்களின் ஆசியாலும், அறிவுரையாலும் மென்மேலும் தமிழார்வம் வளர்க்கப் பெற்றவர். ஆனால் மருத்துவப்படிப்பு மேற்கொண்ட பின்னர் தமிழ்த்தொடர்பு துண்டிக்கப்பெற்றது.

மரு.புகழேந்திப்பாண்டியன் அவர்கள் மருத்துவப்பணி மேற்கொண்ட பின்பு அவரது உள்ளத்தில் தொடர்ந்து இருந்து வந்த தமிழார்வ உந்துதலால் தமக்கையுடன் சேர்ந்து ம.நடராசன் எழுதிய ‘முடநீக்கியலும் காயவியலும்‘ என்ற பாடநூலைத் தமிழாக்கம் செய்வதில்- முதலில் நூல்தேர்வு செய்வதிலும், அதில் உள்ள கருத்துப் பொருத்தம் சோதிப்பதிலும்; இறுதியாக ஊடுகதிர்ப்படங்கள் தொகுப்பது வரை- முதற்கருவியாகச் செயல்பட்டார். அத்தோடு நில்லாமல் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தென்பகுதியில் அம்பாசமுத்திரம் முதல் சேலம் வரை உள்ள கல்லூரிகளில் ‘ஒரு மணித்துளி‘ என்ற போட்டியை நடத்தி நம் தமிழறிவின் தாழ்நிலையை மாணவருலகம் உணரச்செய்து; அதை மதுரை, கோடைப் பண்பலைகளில் ஒலிபரப்பச் செய்து தன் தமிழ் வேட்கையைத் தணிக்கும் பணியை ஆற்றி வருகிறார்.

இப்போது தமக்கை, தம்பி ஆகியோரின் தமிழ் பார்வை பற்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. “கதிரவன், பகலவன் என்ற சொற்களெல்லாம் இருக்கும்போது சூரியன் என்று சொல்லத் தேவை என்ன?” என்று கேட்கும் மருத்துவத் தம்பியிடம், சூரியன் என்ற சொல்லைத் தவிர்த்து தமிழக வரலாறே எழுத முடியாத நிலை இருக்கும் போது தமிழாகிவிட்ட அச்சொல்லை ஏற்றுக்கொள்வது தான் தமிழும் தமிழரும் முன்னேற வழிவகுக்கும் என்று வாதிடும் தமக்கை மறுபுறம்….

“பென்சில் என்ற சொல்லுக்குப் பதில் கரிமஎழுதுகோல் என்று பயன்படுத்த வேண்டும்” என்று சொல்லும் தம்பி ஒருபுறம்…. பென்சிலை பென்சில் என்றே பயன்படுத்த வேண்டும்” என்று சொல்லும் தமக்கை மறுபுறம்….

காந்தம் என்றால் தென்துருவம், வட துருவம் என இரு துருவங்கள் உண்டு அல்லவா? ஒரு துருவம் கொண்ட காந்தம் இல்லை அல்லவா? இரு துருவம் இருந்தால்தானே மின்சாரத்தை காந்தத்திலிருந்து உருவாக்க முடியும்? இது போன்றே இருவருக்கும் இடையில் தமிழாக்கம் செய்வதில் இரு மாறுபட்ட கருத்து வேறுபாடுகளும் உண்டு; இந்த இரு மாறுபட்ட கருத்து வேறுபாடுகளில் உருவாகும் மின்சாரமாக 2000க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் உருவாக்கி உள்ளமை ஆரோக்கியமான நிகழ்வு என்பதில் சிறிதும் ஐயம் இல்லைதான்.

இவர்கள் இருவரும் இன்னும் பல நூல்களை உருவாக்க வேண்டும் அதில் பல தமிழ்ச் சொற்களை புதிதாக உருவாக்க வேண்டும். அவற்றை தமிழ் கூறும் மருத்துவ உலகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசை என் மனதில் உண்டு.

மேலும் முனைவர் திருமதி ச.கண்மணிகணேசன், மரு.புகழேந்திப்பாண்டியன் இருவரும் தமது சொற்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தமைக்கு நான் நன்றிக் கடன் பட்டவனாக இருக்கிறேன் என்பதை மனதாரக் கூறிக் கொள்கிறேன்.

கைபேசியாக்கம், மு.பிச்சைமுத்து

முன்னுரை

“மெல்லத் தமிழினிச் சாகும்“ என்ற பாரதியின் பாடலடி அச்சத்தின் வெளிப்பாடு தான். அந்த அச்சத்தைப் போக்கத் தமிழுலகம் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்பது என் கொள்கை.

  • ம.நடராசன் எழுதிய ‘A Text Book Of Orthopaedics And Traumatology’ என்ற நூலின் ஒரு பகுதியை ‘காயஅறுவையியல் மருத்துவம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த போது நானும் என் தமக்கையும் சேர்ந்தமர்ந்து சில ஆண்டுகளில் பலமுறை மருத்துவக் கலைச்சொல்லாக்கக் கூட்டுமுயற்சியில் ஈடுபட்டோம். தமிழ்நாடு அரசு பாடப்புத்தக நிறுவனத்தின் நிதியுதவியோடு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பதிப்பித்த அந்நூலில் இடம்பெற்ற 1500க்கும் மேற்பட்ட கலைச்சொற்களை மின்தமிழில் நூலாக வெளியிட்ட போது மனதிற்கு மிகவும் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

என் மனைவி திருமதி நந்தினி பாண்டியன் மலடுநீக்கச் சிறப்பு மருத்துவர். மக்கட்செல்வம் இன்றி மனம் நொந்து வரும் தம்பதியருக்கு விளக்கமும், ஆறுதலும், அறிவுரையும் கூறுவார். ஆனால் ஆர்வமிகுதியால் அவர்கள் கேட்கும் சில அறிவியல்பூர்வமான கேள்விகளுக்கு என் மனைவி பதில் கூறும்பொழுது அதைப் புரிந்து கொள்ளச் சிரமப்படுவார்கள். என் மனைவி அதற்கு மேல் விளக்க சிரமப்படுவார். காரணம்; பல அறிவியல் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் இல்லாமையே.

இக்குறை போக்கும் எண்ணத்தில் மறைந்த காந்தீய சிந்தனையாளர்; தமிழறிஞர் திரு.செயப்பிரகாசம் அவர்களது ‘முழுமை அறிவியல் உதயம்’ எனும் நற்றமிழ் மாதாந்திர ஏட்டில் என் மனைவியின் கருத்துக்களைத் தமிழாக்கம் செய்து எட்டுப் பாகங்களாகப் பிரசுரித்தோம்.பொது மக்களிடம் இருந்து அந்தக் கட்டுரைகட்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து திரு.செயப்பிரகாசம் அவர்கள் ‘மங்கிவரும் மக்கட் செல்வம்’எனும் நூலாக வெளியிட்டார்.

தமிழாக்கம் செய்யும்போது அச்சொல்லின் மூலாதாரத்தை மனதில் கொண்டு முடிந்தமட்டும் காரணப் பெயர்களாகத்; தன்னிலை விளக்கும் சொற்களாகவே மாற்றினேன். ஏனெனில் காரணப்பெயர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அது மட்டுமின்றி மறவாமலும், காலத்தால் அழியாமலும் இருக்கும் என்பது என் எண்ணம். இப்போது எல்லாவற்றையும் சேர்த்து அகராதியாகத் தொகுப்பதில் நண்பர் பிச்சைமுத்து காட்டும் ஆர்வமிகுதியைப் பார்க்கும் போது ‘தமிழ் வாழும்’ என்ற நம்பிக்கை பிறக்கிறது. இனி ஒரு மருத்துவத் தமிழ்நூல் எழுதினால் உடன் பிச்சைமுத்து நினைவு வரும்.

இப்படிக்கு, புகழேந்திப் பாண்டியன்

பதிப்புரை

2019 பொங்கலன்று மருத்துவ அகராதியை தேடுதுணையாக வெளியிட்டோம். அவற்றின் சொற்களை அகர வரிசைப் படுத்தி இந்தக் களஞ்சியத்தை வெளியிடுகிறோம். இதன் மூலம் மருத்துவச் சொற்களை இணையம் முழுதும் பரப்ப உதவும் என எண்ணுகிறோம். இந்த நூலில்

01 தோள் மேற்கைகளின் முறிவு 02 உறுப்புத்தரிப்புகள் 03 எலும்பு மூட்டுச் சிதைவு 04 முழங்கை முன்கை மணிக்கட்டுச் சிதைவு 05 கைச் சிதைவு 06 இடை தொடைச் சிதைவு 07 முழங்கால் கால் கணுக்கால் பாதச் சிதைவு 08 முதுகுத் தண்டுச் சிதைவு 09 நரம்புச்சிதைவு 10 நாளவட்டச் சிதைவு 11 இடுப்பெலும்பு முறிவு 12 வெளிக்காய முறிவு 13 மென்திசுச் சிதைவு விளையாடல் சிதைவு 14 பக்க உறுப்பின் சமநீளமின்மை 15 மலடுநீக்க மருத்துவம் 16 மாக்கட்டு உத்திகள், அணைவரி 17 முடநீக்கியால் அறுவை மருத்துவத்தில் பயன்படும் வேதிப்பொருட்கள் 18 முடநீக்கியால் கருவிகளும் துணைக்கருவிகளும் 19 உறுப்புத்தரிப்பும் பக்க உறுப்புப் பொறுத்த உத்திகளும்

போன்ற மருத்துவம் சார்ந்த பிரிவுகளுடன் வெளிவருகின்றது.

இப்படிக்கு, மு.பிச்சைமுத்து