/tamil_tamil_akaramuthali

தொப்பாசிரியர் மு.சண்முகம் பிள்ளை | மேலாய்வாளர்கள் பேரா . அ.ச.ஞானசம்பந்தன், பேரா . அ.மு.பரமசிவானந்தம், பேரா . கொண்டல் சு. மகாதேவன் | Tamil - Tamil Agaramuthali by M. Shanmugampillai

GNU General Public License v3.0GPL-3.0

tamil_tamil_akaramuthali

Tamil - Tamil Agaramuthali by M. Shanmugampillai

தொப்பாசிரியர் : மு.சண்முகம் பிள்ளை | மேலாய்வாளர்கள்: பேரா . அ.ச.ஞானசம்பந்தன், பேரா . அ.மு.பரமசிவானந்தம், பேரா . கொண்டல் சு. மகாதேவன்

Thanks to http://www.tamilvu.org/ta/library-ldttam-html-ldttamin-159450

அணிந்துரை

தமிழ்மொழியின் பழங் கலைகளுள் ஒன்று அகராதிக் கலை (அகரமுதலிக் கலை). தொல்காப்பியர் காலத்திலேயே வித்தூன்றப்பட்ட இக் கலை ஏனைய பழங் கலைகளைப் போலல்லாமல் என்றும் நிலைத்து நிற்கும் புத்தம் புதிய கலையாய் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மொழி வளர்ச்சி என்னும் மாளிகையின் மேற்கட்டுமானமாக இருப்பவை காவியங்கள் என்றால் அதன் அடித்தளமாக அமைவது அகராதிக் கலை எனலாம். எனவேதான், மொழி வளர்ச்சிக்கு ஆதாரமான இந்தக் கலையில் இன்று உலகிலுள்ள எல்லா மொழியாளர்களும் பெருமளவில் ஆர்வமும் அக்கறையும் காட்டிவருகிறார்கள்.

தமிழ்மொழியைப் பொறுத்தமட்டிலும் இன்று சிலபல அகரமுதலிகள் வழக்கில் இருப்பது உண்மைதான். எனினும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறையினர், தமிழ் ஆய்வாளர்கள் என்னும் அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படத்தக்க, அடக்கமான ஓர் அகராதி தேவை என்று உணரப்பட்டது. இந்தப் புதிய தேவையினை நிறைவுசெய்யும் பணியில் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் ஈடுபட்டது. கல்வித் துறையில் தமிழ்மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கப் பாடுபட்டுவரும் பாடநூல் நிறுவனம் இப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது. இப் பணி இன்று நிறைவுபெற்றுத் தமிழ்மக்களின் கைகளில் தவழவிருக்கிறது. தமிழ்மொழியின் அண்மைக்கால வளர்ச்சி இந்த அகரமுதலியில் பக்கத்துக்குப் பக்கம் எதிரொலிப்பதை நாம் நன்கு காணமுடிகிறது. 64,048 சொற்களடங்கிய இவ் வகரமுதலி தமிழ்மொழியில் திறமைபெற விரும்புகிற அனைவருக்கும் உறுதுணையாக இருந்து கைகொடுக்கும் என்பது திண்ணம்.

இவ் வகரமுதலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரும் தமிழ்மக்களின் பாராட்டுக்கு உரியவர்களாகிறார்கள். இதனைத் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காகத் தமிழ்கூறும் நல்லுலகம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சென்னை- 600 009 23-11-1984 } செ. அரங்கநாயகம் தமிழகக் கல்வியமைச்சர்

பதிப்புரை

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் தலையாய பொறுப்புத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான பாடநூல்களை நியாயமான விலையில் உரிய காலத்தில் கிடைக்கச் செய்வது. இப் பொறுப்புடன் இயன்ற வகைகளிலெல்லாம் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றுவதும் இந் நிறுவனத்தின் கடமையாகவுள்ளது.

இந் நிறுவனத்தின் தமிழ்வளர்ச்சிப் பணி கல்லூரி நிலையில்தான் பெரிதும் மையங் கொண்டிருக்கிறது. தமிழ்வளர்ச்சிக்கு உரமூட்டும் வகையில் பாடநூல்கள் அல்லாத பிற சிறப்பு வெளியீட்டு நூல்களையும் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. இச் சிறப்பு வெளியீட்டு வரிசையில் தமிழ்மொழி வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் முதலிடம் வகிப்பது 'தமிழ்ச்சுருக்கெழுத்து அகராதி '. இந்திய மொழிகளுள் இப்படியோர் அகராதி வெளியிடப்பட்டிருப்பது தமிழில் மட்டுமே.

இப்போது தமிழ்மொழி வளர்ச்சி என்னும் உயரிய இலட்சியத்தினை நோக்கிய பிறிதொரு முயற்சியாக இத் 'தமிழ்-தமிழ் அகரமுதலி' யை நிறுவனம் உங்கள்முன் வைக்கிறது. பள்ளி மாணவர் முதல் தமிழர் அனைவருக்கும் பயன்படும்வண்ணம் இவ் வகரமுதலி ஆழமாகவும் அகலமாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது. அகரமுதலிக் கலையில் பட்டறிவு சான்ற புலவர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் தொகுப்புப் பணியும் தமிழறிஞர்கள் அ. ச. ஞானசம்பந்தன், அ. மு. பரமசிவானந்தம், கொண்டல் சு. மகாதேவன் ஆகியோரின் மேலாய்வுப் பணியும் பாராட்டுக்குரிய தமிழ்ப் பணிகளாக மிளிர்கின்றன.

தமிழ்மொழி வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களைத் தீட்டி அவற்றை முனைப்பாகச் செயற்படுத்தி வருபவர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள்; தந்தை பெரியார் அவர்களின் தமிழ்மொழியை அறிவியல் யுகத்துக்கும் பொருத்தமான மொழியாக்கும் முயற்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கண்டார். அந்தச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசின் திட்டமாகவே ஏற்றுச் செயற்படுத்திக் கொண்டிருப்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பழைய பாரம்பரியத்துக்கு இணங்கத் தமிழ்மொழிக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் கண்டிருப்பவர் அவர்.

இவ்வாறு தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்மக்களின் மேம்பாட்டுக்கும் என்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு இந் நூலினைப் படைப்பதில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பெருமை கொள்கிறது.

சென்னை-600 006 10-5-1985 } ஈ. வெ. கி. சுலோசனா சம்பத் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்

முகவுரை

(தொகுப்பாசிரியர்)

அகரவரிசை:

அகரவரிசை தொல்காப்பியர் நாளிலேயே தொடக்கமாயிற்று. "எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப" என்று எழுத்துகளைத் தொகைசுட்டி முதற்கண் அவர் அறிவிக்கின்றார்; பின்னர், சொற்களின் புணர்ச்சி கூறத்தொடங்குமிடத்து மொழிமுதல் எழுத்து மொழியிறுதி எழுத்துகளை வரையறுத்துக் காட்டியுள்ளார். மொழிமரபில் விளக்கிய மெய்ம்மயக்க மரபுகளை நினைவுகூர வைக்கும் வகையில் உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல் என உயிரீற்றுச் சொற்கள், புள்ளியீற்றுச் சொற்களுடன் பிற சொற்கள் புணரும் முறைமை காட்டும் பகுதிகளுக்குப் பெயரிட்டுள்ளார். இவ்விரு இயல்களிலும் அவ்வச் சொற்களின் ஈறுகளை அகரவரிசை முறையில் அமைத்துச் சொற்புணர்ச்சி இலக்கணம் உரைக்கின்றார்.

திருக்குறளும் அகரமுதல் னகர இறுவாய் அமைப்புமுறையை நினைவூட்டும் வகையில் காட்சிதருகிறது. "அகர முதல எழுத்தெல்லாம்" என்று தொடங்கிய வள்ளுவப் பெருந்தகை "கூடி முயங்கப் பெறின்" (1330) என னகர ஈற்றுச் சொல்லால் நூலைத் தலைக்கட்டுகிறார்.

திருநாவுக்கரசர் அருளிய சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை (தேவா. 5. பதி.211) அகரவரிசை முறையில் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.

அகராதி நிகண்டு:

தமிழ் நெடுங்கணக்கு எழுத்துமுறையை வேறு சிலரும் சுட்டியபோதிலும், 'அகராதி' என இன்று வழங்கும் பொருளில் நூலாக்கம் செய்தவர் சிதம்பரம் இரேவணசித்தரேயாவார். இவரை இரேவணாத்திரியர் என்றும் குறிப்பது உண்டு. இவர் கி.பி. 1594-ல் தாம் இயற்றிய நிகண்டிற்கு 'அகராதி நிகண்டு' எனப் பெயர் சூட்டினார். பெயருக்கு ஏற்பச் சொற்கள் அகரவரிசையில் அமைய நூற்பாக்களை முறைப்படுத்தியுள்ளார். எனவே, இவருடைய நிகண்டு நூலினை 'அகராதி சூத்திரம்' என்றும் குறிப்பிடுவது உண்டு.

அகரவரிசை அமைந்த வகை:

இன்று நாம் கருதுவதுபோலச் சொற்களின் அகரவரிசை முறை - அதாவது சொல்லின் இரண்டாம் மூன்றாம் முதலிய எழுத்துகளையும் நோக்கி அமைக்கும் முறை - அந் நாளில் இல்லை. அகரமுதலிய எழுத்துவருக்கச் சொற்கள் அவ்வப் பகுதியில் இடம்பெறுதல் காணலாம். இதனினும் சற்று வளர்ச்சிபெற்ற அகரநிரல்முறை, அகராதி மோனைக் ககராதி யெதுகை, பல்பொருட் சூடாமணி, பொதிகை நிகண்டு ஆகியவற்றில் காணப்படுகின்றன.

அகராதிப் பெயர்;

செய்யுள் வடிவிலேயே வழங்கிவந்த நிகண்டுநூற் பொருள்களை உரைநடையில் அகரநிரலில் அமைத்துத்தர முற்பட்ட முதல்வர் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெஸ்கி பாதிரியாரேயாவார். சொற்பொருள் உணர்த்தும் நூலுக்கு ' அகராதி' என்னும் பெயரை வழங்கியவரும் இவரே. கி.பி. 1732-ல் பெஸ்கி பாதிரியார் தாம் தொகுத்து அமைத்த நூலுக்குச் 'சதுரகராதி' என்னும் பெயரினைச் சூட்டினார். அதுமுதலாகச் சொற்களுக்கு உரைவழி விளக்கம் தரும் நூல்கள் எல்லாம் ' அகராதி' என்னும் பெயரினைப் பெறுவதாயின.

வள்ளுவர் வழங்கிய வான்மறையின் முதற்குறட்பா,

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு".

என்பது. இதன் முதலடியில், ' அகரம் ' - ' ஆதி' என்னும் இருசொற்களும் இடம்பெறுகின்றன.